திருமணமான 16 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

 

கூடுவாஞ்சேரி, ஜூலை 1: ஊரப்பாக்கம், வைகை நகர், சுஜா குடியிருப்பில் வசித்து வருபவர் சுப்புராஜ் (31). இவருக்கும், சித்ரா (25) என்ற பெண்ணுக்கும், கடந்த ஆண்டு, பிப்ரவரியில் தஞ்சாவூரில் திருமணம் நடந்தது. சுப்புராஜ், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற சுப்புராஜ், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வெகு நேரம் கதவை தட்டியும் சித்ரா கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர், பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக சென்று பார்த்தபோது, மனைவி சித்ரா, படுக்கை அறையில், மின் விசிறி கொக்கியில், புடவையால் தூக்கு போட்டு தொங்கியபடி இருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுப்புராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சித்ரா இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், சித்ராவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து, சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து, பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 16 மாதங்களே முடிந்துள்ளதால் இச்சம்பவம் குறித்து தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: