திருமணம் வரமருளும் முருகன்!

குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி, இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் அவரது கனவில் தோன்றி, ‘இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி வழிபடு!’ என்று கூறினார். அடுத்த நாளே ஆலயம் கட்டும் பணியில் இறங்கினார், குப்பண்ணன்.
அப்போதைய ஆங்கிலேயர் கெடுபிடி இருந்தது. குப்பண்ணனின் முயற்சிக்கு இடையூறாக இருந்த ஆங்கிலேய அதிகாரிக்கு, திடீரென பார்வை முற்றிலும் போய், உடல் அரிப்பும் ஏற்பட்டது. தன் தவறை உணர்ந்த அவர், குப்பண்ணனிடம் மன்னிப்பு கேட்க, அவரும் முருகனை மனமுருகி வேண்டிக் கொள்ள, அதிகாரியின் குறைகள் நீங்கின. அவரே கோயிலுக்கு வரவேண்டிய மரச்சட்டங்களைப் பாதுகாப்பாகப் போய்ச் சேர உதவினார்.
அந்த பாலதண்டாயுதபாணி, இன்றும் பக்தர்களுக்கு நேரும் தடைகளை எல்லாம் விலக்கி அவர்கள் வாழ்வில் இனிமை சேர்க்கிறார். குறிப்பாகத் திருமணத் தடைகள்.
தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெற வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இங்கே `சுயம்வரா பார்வதி யாகம்’ நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. யாக பூஜையில் கலந்துகொண்டால், பாலதண்டாயுதபாணி திருவருளால் திருமண நிச்சயதார்த்தம் 48 நாட்களில் நடைபெறுகிறது என்கிறார்கள்.
இவ்வாறு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வைகாசி 26ம் தேதியன்று கோயில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வரா பார்வதி யாகமும் அன்னதானமும் நடத்தப்படுகிறது.
இங்கே பக்தர்களுக்குத் தரப்படும் பிரசாதம் பல நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை பெற்றது. மனநோயாளிகளும் இங்கே வந்து குணம் பெற்றுச் செல்கிறார்கள். செய்கின்ற வேலைகளில் மாறுதல் விரும்புகிறவர்களும் இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறர்கள். யாக பூஜையில் கலந்துகொள்ள வருபவர்கள், கால்கிலோ உதிரிப்பூவும், இரண்டு முழம் கட்டிய பூச்சரமும், ஒரு எலுமிச்சம் கனியும் கொண்டு வருகிறார்கள். ஜாதகத்தை இறைவனின் காலடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம், சத்ய மங்கலம் அருகே டி.ஜி. புதூர் சாலையில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

Related Stories: