பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

சிவகங்கை, ஜூன் 24: திருந்திய நெல் சாகுபடிக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சங்கரலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மை துறை சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பதக்கம் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி அல்லது எந்திர நடவு முறையில் பயிர் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைத்தாரர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். 2 ஏக்கர் அளவிலும் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த மூன்று ஆண்டுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது. அறுவடை செய்யும் தேதியினை 15நாட்களுக்கு முன்னரே சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயனடைய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: