×

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

 

சேலம், ஜூன் 23: சேலத்தில் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ேசலம் அடுத்த சேலத்தாம்பட்டி நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வரும் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக போர்டிகோவிற்கு வந்த அவர்கள், திடீரென அங்குள்ள படியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘சேலத்தாம்பட்டி நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

இங்கு முறையாக கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிவுநீருடன் மனித மலம் வீட்டை சுற்றி அதிக அளவில் தேங்கியுள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரில் மனிதக் கழிவுடன் கழிவுநீர் கலக்கிறது. இந்த தண்ணீரை அங்கு வசிக்கும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சத்துணவு மையமும் செயல்பட்டு வருகிறது. அதில் படிக்கும் குழந்தைகள் கழிவு நீர் கலந்த நிலத்தடி நீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு, அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’
என்றனர்.

 

Tags : Salem ,Collector ,Ilam Bhagwat ,Salethampatti ,Salem… ,
× RELATED அரசு பஸ்சை வழிமறித்து சென்ற போதை நபர்