×

வேங்கைவயலில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை..!!

புதுக்கோட்டை: வேங்கைவயலில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் காவலர் உட்பட 2 பேரிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கை வயல் என்ற கிராமத்தில் கடந்தாண்டு பட்டியலின மக்களுக்குத் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குடிக்கும் நீர், உணவு குறித்துக் கேட்டுள்ளனர். அப்போது வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு இருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வெள்ளனூர் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக 75 பேரிடம் விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போதிலும், யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் அழுத்தம் அதிகரித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையம் பரிசோதனை செய்ததில் மனித கழிவு 3 பேருடையது என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 11 பேருக்கு டி.என்.ஏ சோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. மேலும், நிகழ்வு நடந்த அன்று உள்ளூர் வாட்ஸ் ஆப் குழுவில் தகவல் பரிமாறிய ஒரு ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேரிடம் நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனை இன்று நடைபெற உள்ளது. குரல் பரிசோதனை, டி.என்.ஏ சோதனை முடிந்த பிறகு குற்றவாளிகள் யார் என்பது தெரியவர வாய்ப்பு உள்ளது.

The post வேங்கைவயலில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Vengaiwayal ,Pudukottai ,Venkaiwayal ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...