×

2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் கோடி வரி வசூல்: வருமான வரித்துறை தகவல்

சென்னை: 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் ரூ. 1.24 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூலாகி உள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் மொத்த 1,24,414 கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது. அதில் நிகர வரி வசூல் ரூ.1,08,364 கோடி ஆகும். தேசிய அளவில் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் நான்காம் இடத்தில் உள்ளது. நிகர வரி வசூலான ரூ.1,08,364 கோடியில், ரூ.60,464 கோடி டிடிஎஸ் (TDS) மூலமாக வசூலானது.

இது நிகர வரி வசூலில் 56 சதவிகித பங்கு ஆகும். 2023-24 நிதியாண்டிற்கு வரி வசூல் இலக்கு ரூ.1,17,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இவ்விலக்கில் டிடிஎஸ்க்கான இலக்கு ரூ.59,851 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் பல புதிய பரிவர்த்தனைகள், அதாவது பணம் திரும்பப் பெறுதல், வெளிநாட்டிற்குப் பணம் அனுப்புதல், சொகுசு கார்கள் வாங்குதல், ஆன்லைன் விளையாட்டு போன்றவையும் டிடிஎஸ் வரம்பிற்க்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலமானது, டிடிஎஸ் தொடர்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் மற்றும் நடைமுறைகள் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு விளக்கும் விதமாக பலதரப்பட்ட சேவைகளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நோக்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள வரிப் பிடித்தம் செய்பவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பிரசுரங்கள் மற்றும் கையேடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டிரேசஸ்) போர்ட்டலில் வரிப் பிடித்தம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்கும் விதமாக தமிழ் மொழியில் 16 காணொலிகள் You tube சேனலில் (https:// youtube.com@incometax tamilnadu andpuduc9090) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித்துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக “டிடிஎஸ் (TDS) நண்பன்” என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான காலக்கெடு மற்றும் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற கேள்விகளுக்கு பிரத்யேகமாக தகவல்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்பாட் (Chatbot) தொடங்கப்பட்டது. இது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு இடையே இடைமுகமாக 24 X 7 செயல்படும் நோக்கம் கொண்டது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில், அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் வெளியிடப்பட்டது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி இணையதளத்தில் (www.tnincometax.gov.in) கிடைக்கப்பெறும் இணைப்பு வாயிலாகவும் அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் கோடி வரி வசூல்: வருமான வரித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,CHENNAI ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...