×

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் ஜனவரி – ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி – ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன் இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது,

முதலமைச்சரின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும், 2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 15,49,10,708 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். முதலமைச்சர் சுற்றுலாத்துறைக்கு தொழில் அந்தஸ்தை வழங்கும் சுற்றுலா கொள்கையை வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் முதலமைச்சர் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.12.92 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகளும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், நடைபெற்று வருகின்றன.

கொல்லிமலையை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், உதகை படகு குழாமில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஜவ்வாது மலையில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ஏலகிரி மலையில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தை ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத்தலங்களில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரைப் பகுதியை ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகளும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் உள்பட தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் www.tamilnadutourism.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் யுனஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மலைகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், வனஉயிரிகள், அரண்மனைகள், நினைவகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள், சுற்றுலாத்தலங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களின் மெய்நிகர் சுற்றுலாக்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள முகவரியினை அனைத்து சுற்றுலா அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்பதுடன், அவர்கள் மூலமாக வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் கொண்டு சேர்த்து, உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். 27.9.2024 அன்று நடைபெற உள்ள உலக சுற்றுலா தின விழாவில் வழங்கப்பட உள்ள சுற்றுலா விருதுகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா பங்குதாரர்களும் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அலுவலர்கள், மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் ஜனவரி – ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ramachandran ,Chennai ,Tourism Minister ,K Ramachandran ,Walaja Road, Chennai ,Dinakaran ,
× RELATED பல்வேறு சீர்மிகு திட்டங்களால்...