மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபாரமாக ஆடி 4 – 1 என தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ட்ராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சில போட்டிகளில் ஆடிய போதும் இளம் வீரர்களை மட்டுமே கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்நிலையில் மாஜி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், “கடந்த சில டி20 போட்டிகளில் சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி சிறப்பாக ஆடியது.
இப்போது நம் எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா இரண்டும் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுடன் நிச்சயம் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். நாம் இப்போதே இளம் வீரர்களை ஆதரித்தால் அவர்கள் உலகக்கோப்பை வருவதற்குள் தயாராகி விடுவார்கள். அதே சமயம், விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா தங்கள் டி20 எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவர்களிடம் பிசிசிஐ பேச வேண்டும்’’ என்றார்.
மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடாத நிலையில், அவர்கள் இல்லாத நிலையில் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என்றும் ஹர்பஜன்சிங் யோசனை கூறி உள்ளார்.
The post சூர்யகுமார் தலைமையில் டி20 அணி: ஹர்பஜன் யோசனை appeared first on Dinakaran.