×

கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்க்க 2 மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர் நாள் நிகழ்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில் இரு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே இணக்கமான சூழலை உருவாக்கி பணியாளர்களுடைய பணித்திறனை மேம்படுத்தவும், பணி தொடர்பாக ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காணவும், இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு செயல்முறை ஆணை அனுப்பட்டுள்ளது. அந்த ஆணையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று பணியாளர் நாள் நிகழ்வினை நடத்தவும், விடுமுறை நாளாக இருந்தால் அடுத்து வரும் வேலைநாளில் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்பட வேண்டிய தேதி முறையே அட்டவணை விவரமும் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சுழற்சி முறையில் கூட்டத்தை நடத்திடவும், பணியாளர் குறைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்களை அதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவிட வேண்டும், இணையதளத்தில் பதிவிட முடியாத மனுக்கள் பணியாளர் நிகழ்வின்போது அளிக்கலாம் எனவும், அதற்கான கணினி மற்றும் இணையதள வசதிகளை பணியாளர் நாள் அன்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் நாள் அன்று பெறப்பட்ட மனுக்கள், தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய மனுக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, கூட்ட தீர்மானம் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்க்க 2 மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர் நாள் நிகழ்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,CHENNAI ,Cooperative Minister ,Minister of Cooperatives ,Dinakaran ,
× RELATED ‘கூட்டுறவு’ என்ற பெயரில் புதிய செயலி அறிமுகம்