×

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹40 லட்சம் வாசனை திரவியம் பறிமுதல்: இலங்கை விமான பயணிகள் 2 பேர் கைது

மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வந்த ₹40 லட்சம் மதிப்புள்ள நறுமண கட்டைகள் மற்றும் உயர்ரக வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, இலங்கையை சேர்ந்த 2 பேர் சுற்றுலா பயணிகளாக சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் பை, சூட்கேஸ்களை திறந்துகாட்டும்படி கூறினர். உயர்ரக வாசனை திரவியங்களின் நறுமணம் வீசியதால் பை மற்றும் சூட்கேஸ்களை திறந்து சோதித்தபோது 20 பார்சல்கள் இருந்தன. பார்சல்களை பிரித்தபோது, சந்தனத்தைவிட அதிக நறுமணம் தரக்கூடிய 20 கிலோ அகில் கட்டைகள் இருந்தன. மற்றொரு பையில் மிகவும் விலை உயர்ந்த அகர் அத்தர் ஆயில் பாட்டில்கள் 15க்கும் மேற்பட்டவைகள் இருந்தன.

அகில் மரம், சந்தன மரத்தைவிட அதிக நறுமணம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரம். இதை வீடுகளில் வளர்ப்பது, சர்வதேச வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இந்த மரங்கள் இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளிலும் நாகா மலை காடுகளிலும் பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அதிகமாக அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன. இந்த மரங்களில் இருந்து வடியும் பிசின்களில் அகர் அத்தர் ஆயில் கிடைக்கிறது. இந்த ஆயில் அதிக நறுமணத்துடன் கூடிய உயர் ரக வாசனை திரவியம். மிகவும் விலை உயர்ந்தது. உயர்ரக அகர்வத்திகள், வாசனை திரவியங்களான செண்டுகள், சாம்பிராணிகள், கொடிய விஷங்களை முறியடிக்கும் மருந்துகள் போன்றவை தயாரிக்க இவை பயன்படுத்துகின்றனர்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. மேலும் சர்வதேச வனத்துறை அனுமதி இல்லாமல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அகில் கட்டைகள் மற்றும் அகர் அத்தர் ஆயில்களின் மதிப்பு இந்தியாவில் குறைவாக இருந்தாலும் சர்வதேச அளவில் பன்மடங்கு அதிகம். சர்வதேச அளவில் இந்த பொருட்களின் மதிப்பு ரூ.40 லட்சம். இவர்களிடம் இருந்து நறுமண கட்டைகள் மற்றும் உயர்ரக வாசனை திரவியங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாருக்காக நறுமண கட்டைகள், ஆயில்களை கடத்தி வந்தார்கள் எனவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹40 லட்சம் வாசனை திரவியம் பறிமுதல்: இலங்கை விமான பயணிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chennai ,Colombo ,Dinakaran ,
× RELATED சினிமாவில் தோற்றதால் ஆன்மிக...