சென்னை: மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை பெய்த நிலையில், நாளை, நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் அறிவிப்பை அடுத்து புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்பதால் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி வருவாய்த்துறையினரிடம் கேட்டறிகிறார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.