கரூர், நவ. 22: கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் கரூர் மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கரூர் நகரின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றில் சென்று வருகிறது. இந்நிலையில் பசுபதிபாளையம் தரைப்பாலம் வழியாக செல்லும் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் அதிகளவு செடி கொடிகள் மற்றும் முட்புதர்கள் படர்ந்துள்ளன.
இதனால் ஆற்றின் போக்கு மெதுவாக உள்ளது. எனவே அமராவதி ஆற்றில் எளிதான முறையில் தண்ணீர் செல்லும் வகையில், ஆற்றில் படர்ந்துள்ள செடி கொடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.