சேந்தமங்கலம், நவ.21: சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரத்தில் ஓடும் வரட்டாற்றின் மையப்பகுதியில் இருந்து, 3 திறந்தவெளி கிணறுகள் அமைத்து, சேந்தமங்கலம் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் இருந்து சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதி, சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெண்டாங்கி கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் புதூர் செல்லும் வழியில் மூன்று சாலை பிரிவு உள்ளது. அங்கு சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக தண்ணீர் கசிந்து, வெளியேறி வீணாகி வருகிறது.
தண்ணீர் கசிவால் அங்கு போடப்பட்ட தார்சாலை நாளுக்கு நாள் சேதமாகி வருகிறது. தற்போது சுமார் 2 அடிக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து அடிபடுகின்றனர். கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் முன்பாக, பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து, பள்ளத்தை மூட வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.