×

வெளி ஆஸ்பத்திரியில் முடியாமல் அனுப்பப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் காப்பாற்றப்பட்ட பெண்கள்

நாகர்கோவில், நவ.13: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நலம் பெற்றனர். இது தொடர்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கல்குளத்தை சேர்ந்த 30 வயது பெண் வெளிமருத்துவமனையில் பிரசவித்து அதிக ரத்தபோக்கு காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு 31.10.2020 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் நாடி துடிப்பு இன்றியும், ரத்த அழுத்தம் மிகவும் குறைவான அளவிலும் மயக்க நிலையிலும் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோதும் அவருக்கு 41 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு செயற்கை சுவாசம் உதவியுடன் காப்பாற்றப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தேங்காப்பட்டணத்தை சேர்ந்த 24 வயது பெண்மணி வெளி மருத்துவமனையில் பிரசவித்து அதிக ரத்தபோக்கு காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு 28.10.2020 அன்று அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோதும் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கருப்பை அகற்றப்பட்டது. அவருக்கு 13 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு செயற்கை சுவாச உதவியுடன் காப்பாற்றப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். தேரூரை சேர்ந்த 21 வயது பெண்மணி வெளி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரத்தம் மிகவும் குறைந்து வலிப்பு மற்றும் சிறுநீரகம் பாதிப்படைந்து உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 10 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு 4 டயாலிசிஸ் செய்யப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த 34 வயது பெண்மணி ரத்த கொதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பும், மூச்சு திணறலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நலமுடன் வீடு திரும்பினார். இவர்கள் முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், உதவி உறைவிட மருத்துவர் வழிகாட்டுதலின்படி மயக்க நிபுணர் குழு, மகப்பேறு பிரிவு, மருத்துவர்கள், ரத்த வங்கி மருத்துவர்கள், ஸ்கேன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் முயற்சியால் காப்பாற்றப்பட்டு நலமுடன் உள்ளனர். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : women ,outpatient hospital ,government hospital ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...