பொள்ளாச்சி, நவ.13: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு, செம்மரி ஆடு என சுமார் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்புடன் காணப்பட்டது. இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை என தரத்திற்கேற்ப விலைபோனது. அதுபோல் நேற்று நடந்த வாரசந்தை நாளில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும்.
வெளியூர்களில் இருந்தும், பலர் பந்தய சேவலை விற்பதற்காக கொண்டு வந்திருந்தனர். பந்தய சேவல் ஒன்று ரூ.2000 முதல் அதிகபட்சமாக ரூ.5500 வரை விலைபோனது. தீபாவளியையொட்டி பந்தய சேவலை வாங்க, அதிகாலை முதலே அதிகமானோர் குவிந்திருந்தனர். இதில் பெரும்பாலான வியாபாரிகள் உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் என வெளியூரை சேர்ந்தவர்களாக இருந்தனர். மேலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட நாட்டுக்கோழியானது கூடுதல் விலைக்கு
விற்பனையானது.