×

குளத்தூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர்கள் பலி

குளத்தூர், நவ. 12: குளத்தூர் அருகே இ.வேலாயுதபுரம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பட்டாணி மகன் கார்த்தி (22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்குமார் (19) என்பவரும் தருவைகுளத்தில் மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். வழக்கம்போல் தொழிலுக்காக நேற்று இரவு 8 மணிக்கு இருவரும் ஒரே பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தருவைகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். இ.வேலாயுதபுரம் கிராமம் அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த கார், இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவலறிந்து விரைந்துவந்த குளத்தூர் மற்றும் சூரங்குடி போலீசார், விபத்தில் பலியான இருவரது உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து குளத்தூர் எஸ்ஐ ராமச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Teenagers ,Kulathur ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா