கோவை, நவ. 12: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பாரதிநகர் பின்புறம் உள்ள காமராஜர் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இப்பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அனைவரும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என தெரிவித்தார். பின்னர் அங்குள்ள பொதுமக்களிடமும், சாலையோர ஹோட்டல் உரிமையாளர்களிடமும் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டாமல், குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் தற்காலிகமாக செயல்படவுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முருகன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.