திருமங்கலம், நவ.11: திருமங்கலத்தை அடுத்துள்ள செக்கானூரணியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் புதிதாக 6 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கான ஏலம் விடுவது தொடர்பான டெண்டர் கோரப்பட்டது. இதற்குரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். புதிய கட்டிடத்தை ஏலம் எடுப்பது தொடர்பாக விண்ணப்பிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். ஆனால் அவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை தர வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த திமுக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் மற்றும் வியாபாரிகள் செக்கானூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நேற்று முற்றுகையிட்டனர். வங்கியின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் தனபாண்டி, மதிமுக ஒன்றிய செயலாளர் சிவன், அமமுக நிர்வாகிகள் பரமன், ஒன்றிய கவுன்சிலர் சிவபாண்டி, வக்கீல்கள் மீனாட்சிசுந்தரம், அழகுசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து வங்கிக்கு வந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் டெண்டர் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.