வேட்டவலம், அக்.21: வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் இடத்தை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் ஆய்வு செய்தார். கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு 2020- 2021ம் ஆண்டிற்கான பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கும், பிற சமூகத்தை சேர்ந்த 19 பயனாளிகளுக்கும் என மொத்தம் 29 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தண்டபாணி, ஊராட்சி செயலாளர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.