×

தூத்துக்குடி விமான நிலையம் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 11,800 பேர் பயணம் இயக்குநர் தகவல்

தூத்துக்குடி, செப்.30: தூத்துக்குடி விமான நிலையம் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11,811 பேர் பயணம் செய்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினம் தூத்துக்குடி விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக சுற்றுலா பயணிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் ஓட்டல்கள் சார்பாக மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைகுண்டம் குமரகுருபரர் கலைக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சி” என்ற தலைப்பில் இணைய வழியில் கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாகைக்குளம் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் சான்றிதழ்  வழங்கி பேசியதாவது: ‘தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிட்-19 பரவல் காரணமாக விமான போக்குவரத்து நடைபெறவில்லை. தொடர்ந்து, மே மாதத்தில் 350 விமான பயணிகளும், ஜூன் மாதத்தில் 3,933 விமான பயணிகளும், ஜூலை மாதத்தில் 7,514 விமான பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 11,811 விமான பயணிகளும் பயணம் செய்துள்ளனர்’ என்றார். தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பயணிகளுக்கு மாவட்ட சுற்றுலா விளக்க கையேடு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார். விமான நிலைய பணியாளர்கள், விமான நிலைய இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் பேராசிரியர் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thoothukudi Airport ,
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...