ஊட்டி,செப்.26: ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது.இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதியை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே சரிவான பகுதியில் நடந்து சென்று அணையின் கரையில் இருந்து பார்வையிட்டு மகிழ்வார்கள். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன. அண்மையில் நீலகிரியில் உள்ள பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட், ஊட்டி படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கவில்லை.இதனால் இந்த சுற்றுலா தலங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனிடையே இ-பாஸ் நடைமுறையில் உள்ள கெடுபிடி மற்றும் மழை காரணமாக நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.