×

வில்லியனூர் அருகே கல்லூரி பேருந்து மோதி மாணவர் பரிதாப சாவு

வில்லியனூர், மார்ச் 18:  வில்லியனூர் அருகே கல்லூரி பேருந்து மோதி மாணவர் இறந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம். இவரது மகன் சுதர்சன் (21). இவர் அபிசேஷகப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். வில்லியனூரில் உள்ள காய்கறி கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை காய்கறி கடைக்கு வேலைக்கு சென்று விட்டு, பைக்கில் வீடு திரும்பி உள்ளார். ஆச்சார்யாபுரம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, கல்லூரி பேருந்து சுதர்சனை முந்தி சென்றது. அப்போது பேருந்தில் இருந்த சக மாணவர்கள், சுதர்சனை பார்த்து கை அசைத்துள்ளனர். பதிலுக்கு சுதர்சனும் கையசைத்துள்ளார். அப்போது பைக் மீது பேருந்து உரசியதாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி விழுந்த சுதர்சன், பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண் எதிரிலேயே, சுதர்சன் உயிரிழந்ததை கண்டு பேருந்தில் இருந்த மாணவர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்த வில்லியனூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். இதற்கிடையே மாணவர் சுதர்சன், விபத்தில் பலியானதை அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று காலை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Villianur ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...