பண்ருட்டி, மார்ச் 17: பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்காக வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் மூலம் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இறுதியில் வாலாஜா கழிவுநீர் வாய்க்காலில் வந்தடைகிறது. மக்கள் தொகை அதிகளவு கொண்ட பண்ருட்டி நகரில் உருவாகும் கழிவுப்பொருட்கள் ஒரு சில கழிவுநீர் வாய்க்காலில் தங்கி விடுகிறது. நகராட்சி ஊழியர்களும் அவ்வப்போது இவற்றை அகற்றி வருகின்றனர்.
இதுபோன்ற கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை அகற்றும் போது துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்காமல் பணியில் ஈடுபடுத்துகின்றனர். கையில் எந்தவொரு பாதுகாப்பு கவசம் இன்றி கழிவுப்பொருட்களை அகற்றி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் பொதுமக்கள் பீதியடைந்து பாதிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் துப்புரவு பணியாளர் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி பாதுகாப்பு கவசம் ஏதுமின்றி பணியில் ஈடுபடுவது மிகவும் வேதனையாக உள்ளது. இனியாவது துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கி பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற சமூகஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.