×

குடிமகன்கள் அட்டகாசம் தாங்க முடியாது டாஸ்மாக் கடையை திறக்க கூடாது சிலுக்குவார்பட்டி மக்கள் மனு

திண்டுக்கல், மார்ச் 17: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சிலுக்குவார்பட்டி கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி அஞ்சல், பழைய சிலுக்குவார்பட்டி ஊர் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், எங்கள் பகுதிக்கு மிக அருகில் சிலுக்குவார்பட்டி அமைந்துள்ளது. மேற்படி கிராமத்தில் பெருவாரியாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக்கடை இருந்து வந்தது.

இதனால் மது அருந்தி வருபவர்களால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டது. மேலும் அதன் அருகாமையில் பள்ளிகள் இருப்பதால் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் ெசன்று வந்தனர். இதையடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி மேற்படி அரசு மதுபான கடையை அகற்றினோம். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை வருவதற்கு ஏற்பாடு செய்து வரும் செய்தியை அறிந்தோம். இதனால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். மேலும் பல சமூக விரோத செயல்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது.  அதனால் மதுபான கடை எங்கள் பகுதிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags : Citizens ,task shop ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...