×

திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15 நாள் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளை முதல் 15 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நெம்மேலியிலுள்ள கடல்நீரை   குடிநீராக்கும்  நிலையத்தில் தானியங்கி வடிகட்டி அலகுகள் பொருத்தும் பணிகள் நாளை (17ம் தேதி) காலை 6 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து 15 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

 இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்படும். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், சிக்கனமாகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி 9க்கு 8144930909 என்ற எண்ணிலும், பகுதி 13க்கு 8144930913 என்ற எண்ணிலும், பகுதி 14க்கு 8144930914 என்ற எண்ணிலும், பகுதி 15க்கு 8144930915 என்ற எண்ணிலும் பகுதி பொறியாளர்களை தொடர்பு கொண்டால் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvanmiyur ,areas ,Velachery ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!