திருச்சி, மார்ச் 13: திருச்சி உழவர் சந்தையில் நடந்த தொடர் போராட்டத்தின் போது பிரதமர், முதல்வர் உருவபொம்மையை திடீரென தீ வைத்து எரித்த 256 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழக சட்ட மன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 17ம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த 24வது நாள் போராட்டத்தில் திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து உருவ பொம்மை தீ வைத்து எரித்ததாக ஏர்போர்ட் ஜாகீர்உசேன், ஆழ்வார்தோப்பு இக்பால், பாலக்கரை பாபு (எ)அப்துல்ரஹீம், தில்லைநகர் உஸ்மான் அலி, அயூப்கான், தென்னூர் அஷ்ரப்அலி உள்ளிட்ட 256 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.