நாங்குநேரி, மார்ச் 13: நாங்குநேரியில் இரட்டை ரயில் பாதைக்காக ரயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களாக ஜல்லிகற்கள் இருப்பு வைக்கும் பணி நடக்கிறது.
விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உள்ள சாலையின் குறுக்கே ஜல்லி கற்களை குவித்து வைத்துள்ளதால், தற்போது வயலுக்கு அறுவடை இயந்திரம் கொண்டு செல்வது தடைபட்டு உள்ளது. இதனால் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஒப்பந்ததாரர் தரப்பில் ஜல்லிக்கற்களை சாலையில் இருந்து அகற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் பொதுப்பாதையில் ஜல்லி கற்களை குவித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.