ஊத்துக்கோட்டை, மார்ச் 12: ஊத்துக்கோட்டையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து கோலம் போட்டும், பேரணி மூலம் விழிப்புணர்வை அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்படுத்தினர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் ஊத்துக்கோட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்தும், சுகாதார மற்றும் ஊட்டச்சத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்தும் ரங்கோலி கோலம் மூலமும், பேரணி மற்றும் உறுதிமொழி மூலமும் 20 அங்கன்வாடி மைய பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ராசாத்தி மேற்பார்வையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு தலைமை தாங்கினார். வட்டார திட்ட உதவியாளர் சுதா, பேரூராட்சி தலைமை எழுத்தர் பங்கஜம் முன்னிலை வகித்தனர். பேரணியில், கை கழுவுதல் குறித்தும், சுகாதாரம், ஊட்டச்சத்து குறித்தும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.