அவிநாசி, மார்ச் 12:பாலின சமத்துவமும் மனித உரிமையே என்பதை வலியுறுத்தி, நேற்று அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச மகளிர்தின அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு அவிநாசி அரசு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி முன்னிலை வகித்தார். அவிநாசி தாசில்தார் சாந்தி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி அரசு கல்லூரியிலிருந்து, அவிநாசி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் பங்கேற்றனர். அவிநாசி செடோ எனப்படும் சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு இயக்குநர் பாண்டிச்செல்வி நோக்க உரை நிகழ்த்தினார். முன்னதாக கணினி அறிவியல் துறை தலைவர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் செல்வராஜ், சட்ட ஆலோசகர்கள் மகாலட்சுமி, சகாதேவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் குலசேகரன், அவிநாசி தனிதாசில்தார் சாந்தி, அவிநாசி நில வருவாய் ஆய்வாளர்கள் ஜெனிடா, கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.