×

4 ஆயிரத்து 986 மனுக்களுக்கு தீர்வு

சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் 4 ஆயிரத்து 937 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் முதல் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வருவாய்த்துறை மூலம் பொதுமக்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று முகாம்கள் நடத்தி மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தி மனுக்கள் பெறப்பட்டன. இதில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் என மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களில் மொத்தம் 8 ஆயிரத்து 937 மனுக்கள் வரப்பெற்றன. அதில் தகுதியான 4 ஆயிரத்து 986 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 27 லட்சத்து 18 ஆயிரத்து 385 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எஞ்சிய மனுக்களை மறு ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...