×

தரம் உயருமா செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ?

சிவகாசி, மார்ச் 10: வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. செவல்பட்டியை சுற்றிலும் கொட்டமடக்கிபட்டி, மேலாண்மநாடு, அம்மையார்பட்டி, மீனாட்சிபுரம், குகன்பாறை, அலமேலுமங்கைபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள், மளிகைபொருட்கள், காய்கறிகள் வாங்க செவல்பட்டி வந்து செல்கின்றனர். இதனால் செவல்பட்டியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவம், கல்வி கற்க செவல்பட்டி வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசு மேல்நிலைபள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். செவல்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு மருத்துவர், 2 கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செவல்பட்டியை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் சிகிச்சைக்காக செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குதான் வந்து செல்கின்றனர். தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவசர சிகிச்சைக்கு 15 கி.மீட்டர் தூரம் உள்ள திருவேங்கிடம் அல்லது சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதனால் அவசர காலங்களில் கிராம மக்கள் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் சிகிச்சை பெறுவதில் பாதிப்பு நிலவுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கர்ப்பிணி பெண்கள் 27 கி.மீட்டர் தூரம் உள்ள சிவகாசி அல்லது விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் குழந்தை பிறப்பதில் பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலியாகும் சோகமும் நடக்கிறது. இதேபோல் செவல்பட்டியை சுற்றிலும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் அதிகம் இயங்கி வருகிறது. விபத்து காலங்களில் உடனடி சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த பலர் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் சம்பவமும் தொடர்கிறது. செவல்பட்டியில் 24 மணிநேரமும் செல்படும் தரம் உயர்த்தப்பட்ட 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை துவங்க அப்பகுதி கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Tags : Chevalpatti Primary Health Center ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை