×

சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை

 

சிவகாசி, ஏப்.26: சிவகாசியில் வாறுகாலில் சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றி கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் காமராஜர் சிலை அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரப்பதிவிற்காக வந்து செல்கின்றனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் அலுவலகம் முன்பு காத்திருக்கின்றனர்.

சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டில் இருந்து பழைய நகராட்சி அலுவலகப் பகுதிக்கு செல்லும் வாறுகால், சார்பதிவாளர் அலுவலகத்தின் முன் செல்கிறது. இந்த வாறுகால் நீண்ட காலமாக துார்வாரப்படாததால் அதில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளன. இதனால் கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் பத்திரப்பதிவுக்கு வந்து செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகிறது.  எனவே சார் பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு வாறுகாலை உடனடியாக துார்வாரி குப்பைகளை அகற்றி கழிவு நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Registrar's Office ,Kamaraja ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை