தூத்துக்குடி, மார்ச் 10: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் காலியாக இருக்கும் சமையலர் பணியிடங்களுக்கு தகுதியானோர் வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்கள் ரூ. 15,700 ஊதியத்தில் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும், சமையலர் பணியிடத்துக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவராகவும் இருத்தல் வேண்டும். தகுதியான நபர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு மார்ச் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.