×

போதையில் மனைவியை தாக்கியதை தட்டிக்கேட்டதால் மைத்துனரை எரித்து கொல்ல முயற்சி

சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் கரும்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் நாகப்பன். இவருக்கு விஜி (20) என்ற மகனும், காமாட்சி (22) என்ற மகளும் உள்ளனர். காமாட்சிக்கு திருமணமாகி, அதே பகுதியில் உள்ள அவரது கணவர்  சரத்குமார் (24) வீட்டில் வசிக்கிறார்.சரத்குமாருக்கு குடிப்பழக்கும் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து காமாட்சியை அடித்து உதைத்துள்ளார். இதனை அதே பகுதியில் வசிக்கும் விஜி தட்டிக்கேட்பார் என தெரிகிறது. இதனால்  இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை சரத்குமார் குடித்துவிட்டு வந்து, காமாட்சியை அடித்து, உதைத்துள்ளார். இதையறிந்த விஜி தனது அக்காவை வீட்டுக்கு அழைத்து சென்றார். இரவு 9 மணிக்கு  விஜி தூங்கிக்கொண்டிருந்தபோது சரத்குமார் வந்து மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை விஜியின் முகத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் முகத்தில் தீப்பற்றியதால் அலறி துடித்த விஜி, வீட்டில் இருந்து வெளியே ஓடினார். உடனே சரத்குமார் அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து விஜியை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யும் நோக்கத்தோடு விஜியின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி  எரிக்க முயன்ற சரத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : brother-in-law ,
× RELATED மது அருந்திவிட்டு மனைவியை அடித்ததை...