×

பேருந்துநிலையத்தில் உள்ள விளம்பர போர்டுகளால் விபத்து அபாயம்

காளையார்கோவில், மார்ச் 5: காளையார்கோவில் பேருந்து நிலைய நிழற்குடையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் பயணிகள் மீது விழும் அபாயம் நிலவுகிறது. காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் மதுரை, தொண்டி, காரைக்குடி, பரமக்குடி பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை உள்ளது. இதன் மேல் பகுதியில் இரும்பு ஆங்கிள் அமைத்து அவற்றில் விளம்பர பலகைகளை கட்டிவைத்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் வைக்கப்பட்ட விளம்பரப் போர்டுகள் கிழிந்து தொங்கிக் கெண்டு உள்ளது. மேலும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. தற்போது பேனர்களால் விபத்து நடந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற பேனர்கள் இருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காளையார்கோவில் பேருந்துநிலையம் இடநெருக்கடியில் உள்ளது. தற்போது கிராமப்புறங்களில் திருவிழா மற்றும் திருமண விஷேச காலங்கள் என்பதால் பஸ் ஸ்டாண்டில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பயணிகள் நிற்பதற்கு ஒரே ஒரு சிறிய கட்டிடம் தான் உள்ளது. காளையார்கோவில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பஸ்நிலையம் இல்லாததால் எப்போதும் கூட்டமாக காணப்படும். தற்போது சில நேரங்களில் காற்று பலமாக அடிப்பதால் எப்போது வேண்டுமானாலும் விளம்பர போர்டு மற்றும் இரும்பு கம்பிகள் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்கள் இவற்றை புதுப்பிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : bus station ,
× RELATED சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை...