தென்தாமரைக்குளம், மார்ச் 4 : அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி சாமித்தோப்பில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். முன்னதாக நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்புக்கு பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அய்யா வைகுண்டர் அவதார தின விழா நேற்று (3ம்தேதி) கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன் தினம் காலை திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ள அவதாரபதியில் இருந்து சாமித்தோப்பு நோக்கி தொடங்கிய ஊர்வலம் திசையன்விளை, உடன்குடி, கூடன்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவில் நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலை வந்தடைந்தது.
இதே போல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் இரவில் நாகராஜாகோயில்திடலை வந்தடைந்தது. திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த இரு ஊர்வலமும், நாகராஜா திடலை அடைந்ததும், இரவில் நாகராஜா கோயில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடந்தது. மாநாட்டில் அய்யா வழி பிரமுகர்கள், அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். விடிய விடிய அய்யா வழி பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
அவதார தின விழாவையொட்டி நேற்று (செவ்வாய்) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதியை நோக்கி அய்யாவழி பக்தர்களின் ஊர்வலம் புறப்பட்டது. காவி கொடியேந்திய பக்தர்கள் நெற்றியில் திருநாமமிட்டு முத்துக்குடைகளை பிடித்த வண்ணம் செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க ஊர்வலம் சென்றது. அய்யா அரகர... அரகரா... சிவ, சிவ அரகரா... என முழங்கிய படி பக்தர்கள் சென்றனர். கோட்டார், சுசீந்திரம் ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப்பதியை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்ன தர்மங்கள், சர்பத், மோர், பானகாரம் போன்றவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. காலை முதலே சாமித்தோப்பில் அய்யா வழி பக்தர்கள் குவிந்தனர். சாமித்தோப்பு நான்கு ரத வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிரம்பி இருந்தனர். பக்தர்களுக்கு அன்னதர்மங்கள் வழங்கப்பட்டன.
இரவு சாமிதோப்பு கலையரங்கில் கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பால ஜனாதிபதி, எம்.ராஜவேல், ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நேற்று (3ம்தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைைமயில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.