ஆவடி: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் விகாஸ் குமார் கவுதம் (27). இவர், ஆவடி அடுத்துள்ள அண்ணனூர் ரயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி குஷ்பூ (21). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆகிறது. அண்ணனூர் ரயில்வே குடியிருப்பில் தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில், விகாஸ் குமார் கவுதம் தனது சம்பள பணத்தை சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை குஷ்பு கண்டித்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விகாஸ் குமார் கவுதம், வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.