புதுக்கோட்டை, மார்ச்2: புதுக்கோட்டை பெரியார் நகரில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் புதுக்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் குத்தகை இனங்களுக்கான தொகை, கடை வாடகையினை உடன் நகராட்சி பழைய அலுவலகம், புதிய அலுவலகம், கம்பன் நகர் ஆகிய கணினி வசூல் மையங்களில் வருகிற 5ம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைப்பது, வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும் வகையில் நகராட்சியின் சார்பில் புதுக்கோட்டை பெரியார்நகரில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, வரி வசூலை தொடங்கி வைத்தார். முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் நைனாமுகம்மது, சினீவாசன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கலந்து கொண்டு வரி வசூல் செய்தனர்.