வத்தலக்குண்டு, மார்ச் 2: வத்தலக்குண்டுவில் உள்ள அரவை மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் நடராஜன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜோதிமணி செல்வம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வத்தலக்குண்டு பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது வத்தலக்குண்டு-கெங்குவார்பட்டி சாலையில் புதுப்பட்டி என்ற இடத்தில் சுல்தான் என்பவரின் மாவு அரவை மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து சுல்தானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.