திண்டுக்கல், பிப். 27: திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டுவில் அதிகாரிகள் சோதனை நடத்தி புகையிலை விற்றவர்களுக்கு ரூ.74 ஆயிரம் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிமணி, ரமேஷ் ஆகியோர் திண்டுக்கல்- பழநி பைபாஸ் சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து செம்பட்டி பகுதியில் நடத்திய சோதனையில் 10 கடைகளில் இருந்த புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர் வத்தலக்குண்டு பகுதியில் நடந்த சோதனையில் 9 கடைகளில் இருந்த புகையிலை, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனைகளில் மொத்தம் 21 பேருக்கு ரூ.74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 78 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.