திருவில்லிபுத்தூர், பிப். 26: திருவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் வந்த மீன் வியாபாரி காவலர்களின் வாகன சோதனைக்கு பயந்து நீதிமன்ற வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். வாகனத்தை ஓட்டிய செல்வராஜ் மது அருந்தி இருந்ததால் காவல்துறையின் வாகன சோதனையில் சிக்கிவிடுவோமோ என்று பயந்து காவலர்கள் நின்று கொண்டிருக்கும் சற்று தொலைவிலேயே வானத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளார். தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த செல்வராஜ் அங்கு தான் விஷம் குடித்துவிட்டதாக கூச்சலிட்டு உள்ளார்.
அப்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் செல்வராஜிடம் விசாரித்தபோது, இப்பகுதி முழுவதும் 24 மணி நேரமும் டாஸ்மாக் மற்றும் தனியார் பார்களில் மது விற்கப்படுவதாகவும், அதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்றும், அந்த மதுவை வாங்கி குடித்த தன்னை மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாக கூறி அடிக்கடி வழக்குப்பதிவு செய்வதாகவும், அதனால் தான் மதுவில் விஷம் கலந்து குடித்து தன் உயிரை விடப்போவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் விஷம் அருந்திய செல்வராஜை ஏற்றிக்கொண்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் காவல்துறையை கண்டித்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.