செங்கல்பட்டு, பிப். 17: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.கடந்த 1987-1989ம் ஆண்டு இந்த பள்ளியில் 12ம் வகுப்பு இறுதிப்படிப்பை முடிந்த மாணவ, மாணவிகள் நேற்று பள்ளியில் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை குடும்பத்தினருடன் சந்தித்தனர். பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்களாகவும், சமூகத்தில் நல்ல நிலையிலும் அரசியல் பதவிகளிலும் உள்ளனர். இவர்கள் தாங்கள் உயர்ந்த நிலைக்குவர காரணமாக இருந்த ஆசிரியர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், தங்களது குடும்பத்தினரை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தனர். அவர்களின் பள்ளிப்படிப்பு காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர். பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை பட்டாடை போர்த்தியும், நினைவு பரிசுகளை வழங்கியும் மரியாதை செய்தனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.