திருப்புத்தூர், பிப். 11: திருப்புத்தூர் புதிய பஸ்நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேஆர். பெரியகருப்பன் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். திருப்புத்தூர் காந்திசிலை அருகே ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பஸ்நிலையத்திற்கான புதிய கட்டுமான பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. சுமார் 80 சதவீதம் கட்டுமானம் முடிந்த நிலையில் நேற்று இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கேஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
பணி முடியும் காலம் குறித்தும், பாதை சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துகளை அதிகாரிகளிடம் எடுத்து கூறினார். மேலும் விரைவில் பணிகளை முடித்து பஸ்நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும்படியும், கடைகள் ஒப்பந்த அறிவிப்பிற்கு முன்பு ஏற்கனவே இருந்த கடைக்காரர்கள், பொதுமக்களிடம் கலந்து பேச வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார். ஆய்வின்போது பணி மேற்பார்வையாளர்கள் சந்திரமோகன், உதவி பொறியாளர் அன்புச்செழியன், பேரூராட்சி செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா உள்பட பலர் உடனிருந்தனர்.