×

பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இரண்டு வாலிபர்கள் கைது : மூவருக்கு போலீஸ் வலை

சென்னை, பிப் 11: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஏசு மகன் அஜீத்குமார்(22). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 7ம் தேதி பிறந்த நாள். ஒரு தாதா ரேஞ்சுக்கு உயர்த்த நினைத்த அவரது நண்பர்கள், அஜீத்குமாரின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடத் தீர்மானித்தனர். இதன்படி 7ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, புன்னப்பாக்கம் காலனியில், அவரது நண்பர்களான மணி மகன் கலைவாணன் (25), புஷ்பராஜ் மகன் நரேன் (20), நாகலிங்கம் மகன் பாலாஜி (20), பாபு மகன் விஜய் (20) ஆகியோர் புடைசூழ தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கேக்கினை, பெரிய பட்டா கத்தியைப் பயன்படுத்தி வெட்டி  நண்பர்களுடன் அதனை வீடியோ எடுத்துள்ளார். அத்துடன் அந்த வழியாக சென்ற பொது மக்களையும் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இந்த வீடியோ ‘’வாட்ஸ் ஆப்’’ சமூக வலை தளங்களில் பரவ, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலீசாரின் கவனத்தையும் எட்டவே, உஷாரான புல்லரம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அஜீத்குமார், கலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்த பட்டாக் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி பினுவை தொடர்ந்து, தமிழகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் அருகே தனது நண்பர்களுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி, அதை சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : teenagers ,birthday party ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு