×

எம்.மீனாட்சிபுரத்தில் பழுதான பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, பிப்.11: எம்.மீனாட்சிபுரத்தில் பழுதடைந்துள்ள பள்ளிக்கட்டிடத்தை புதுப்பித்து அடிப்படைவசதிகள் செய்து கொடுத்திட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்குட்பட்ட எம்.மீனாட்சிபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் பாதாளம் தலைமையில் ஊர் பொதுமக்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:எங்கள் கிராமத்தில் பலவருட காலமாக செயல்பட்டு வரும் இந்து துவக்கப்பள்ளியில் தற்போது 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மிகவும் பழமையான நிலையிலுள்ள இந்த பள்ளி கட்டிடமானது மேற்கூரைகள் இடிந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சி அளித்து வருகிறது. அதோடு, பள்ளிக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களுக்கு முக்கியத்தேவையான கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அதோடு பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் போதுமான வகுப்பறைகளும் இல்லை.ஒரே கட்டிடத்தில் தான் 1முதல் 5ம் வகுப்பு வரையுள்ள அனைத்து வகுப்புகளும் செயல்பட்டு வருகிறது. மிகவும் பழுதான நிலையிலுள்ள இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்திடவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுத்திடவும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அக்கறை இல்லா நிலையில் செயல்பட்டுவரும் பள்ளி நிர்வாகத்ததால் ஏழ்மையான நிலையிலுள்ள எங்கள் கிராமத்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதலான வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டவும், விளையாட்டு மைதானம் அமைத்திடவும், பள்ளி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.இதில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், ஊர் நிர்வாகிகள் கணேசன், ஜெயராம், ரமேஷ்குமார், சந்திரன், மோகன், பரமசிவன், அய்யம்பிள்ளை, ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உடன்குடி நூலகத்தில் புதிய புரவலர் சேர்க்கை