ஒட்டன்சத்திரம், பிப்.7: இடையோட்டையில் தேசிய வங்கிக்கு கட்டிடம் கட்டப்பட்டும் திறப்பு விழா காணாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரே ஒரு தனியார் வங்கி மட்டுமே இயங்கி வருகிறது. பல்வேறு அரசு திட்டங்களுக்கும் அரசின் பல்வேறு மானியங்களை பெறுவதற்கும் அரசுடைமை வங்கியில் கணக்கு துவங்குவதற்காக சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டியுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் போன்றோர் இதனால் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இங்கு ஒரு அரசுடைமை வங்கி வேண்டும் என்று ஊர் மக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அடுத்து பாரத ஸ்டேட் வங்கி தனது கிளையை இடையகோட்டையில் துவங்கிட நடவடிக்கையை எடுத்துள்ளது. அதற்கான கட்டிடம் வாடகைக்கு பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஒரு மாத காலமாக வங்கி திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் மாற்றப்பட்டு கொண்டே வருகிறது. இதற்கு வங்கி திறப்பு விழாவிற்கு வரவேண்டிய வங்கி உயரதிகாரி அப்பாயின்மென்ட் வழங்காததை காரணமாக கூறப்படுகிறது. ஒரு தனி மனிதரின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. நீண்ட நாள் கனவான அரசு வங்கி விரைவில் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.