×

கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டம் உறுப்பினர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

கீழ்வேளூர்,பிப்.7: கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தலைவர் கூறினார்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகிநாகராஜன் (தி.மு.க.) தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் புருஷோத்தமதாஸ் (தி.மு.க.), ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அருள்மொழி, திருமலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் (திமுக):தேவூர், வெண்மணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. வரும் கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்னையில் முழு கவனம் செலுத்தி குடி நீர்பிரச்னையை தீர்த்திட வேண்டும் என்றார்.தேன்மொழி (அதிமுக) பேசுகையில், அகரக்கடம்பனூர், திருக்கண்ணங்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அங்குள்ள சாலைகளை சீரமைத்திட வேண்டும் என்றார்.ரெங்கா (திமுக) பேசுகையில், வடக்காலத்தூர், இருக்கை, ராதாமங்கலம், வண்டலூர் ஊராட்சிகளில் சாலைகள் பழுது ஏற்பட்டுள்ளதால் சீரமைத்திட வேண்டும். இந்த ஊராட்சிகளில் குடிநீர் வசதியை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.கருணாநிதி (திமுக) பேசுகையில், நெல் அறுவடை பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், வீட்டிலும், வயல்களில் உள்ள களத்திலும் வைத்துள்ளனர். உடன் அரசு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 1500 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்றார்.

இல்முனிசா (திமுக) பேசுகையில்,திருவாரூரில் இருந்து காக்கழனி, செருநல்லூர், குருக்கத்தி வழியாக கீழ்வேளூருக்கு பேருந்து இயக்கிட வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை தொடங்கிட என்றார்.துணை தலைவர் புருஷோத்தமதாஸ் ( திமுக) பேசுகையில், ஆந்தக்குடி வடக்கு தெரு, தெற்கு தெருவிற்கு தார் சாலை தந்திட வேண்டும், காக்கழனியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் இரட்டை மதகடி பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்க வேண்டும் என்றார்.வாசுகி (திமுக) பேசுகையில், 75 அணக்குடி, கிள்ளுக்கடி பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட நீர் தேக்க தொட்டியை 10 ஆண்டுகளுக்கு மேல் சுத்தம் செய்யாமல் உள்ளது. எனது பகுதியில் உள்ள குளங்கள் அனைத்திற்கும் படிதுறை கட்டிட வேணடும். திருவாரூரில் இருந்து ஆந்தக்கடி, கூரத்தாங்குடி, 105 மாணலூர், தேவூர் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்றார்.கூட்ட முடிவில் ஒன்றிய குழு தலைவர் பேசுகையில், உறுப்பினர்கள் தங்கள் பகுதியின் தேவைகளையும், குறைகளையும் எடுத்து கூறியுள்ளீர்கள். உரிய முறையில் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் இது பற்றி அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Keewalloor Union Committee ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை