நெல்லை, பிப். 4: பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையிலுள்ள கக்கன் நகர், சாந்திநகரில் 45 கடை களின் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையுடன் இணைந்துள்ள இந்தச் சாலையை அகலப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி பாளை கக்கன்நகரில் இருந்து முருகன்குறிச்சி வரையில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கடைகளின் உரிமையாளர்களிடம் கடந்த மாதம் இரு முறை ேநாட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், பாளை முருகன்குறிச்சியிலிருந்து சாந்திநகர் அருகேயுள்ள கக்கன்நகர் வரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. எனவே தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து சில கடைகளின் உரிமையாளர்கள் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பெரும்பாலான கடைகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில், உதவி பொறியாளர் வேலாயுதம், வருவாய் ஆய்வாளர் ரிபாயி, பாளை மண்டல மாநகராட்சி உதவி பொறியாளர் பைஜூ ஆகியோர் முன்னிலையில் பாளையங்கோட்டை கக்கன்நகர் முதல் முருகன்குறிச்சி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 45 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடைகளின் ஓலை கூரை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ்கள், விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன. இன்று பாளை மார்க்கெட்டிலும், வரும் 6ம் தேதி மேலப்பாளையத்திலும், தொடர்ந்து பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.