திருவள்ளூர், ஜன. 31: திருவள்ளூர் அருகே உள்ளது புட்லூர் கிராமம். இங்கு, பழமைவாய்ந்த பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயிலில், நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும் பூங்காவனத்து அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால், இக்கோயிலுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், பெண் பக்தர்கள் அதிகளவில் வேண்டுதல் நிறைவேற வந்து செல்கின்றனர். இங்கு, பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட இலவச கழிவறையில், ‘இலவச’ என்ற எழுத்தை பேப்பர் ஒட்டி மறைத்துவிட்டு, அப்பகுதியில் ஒரு கும்பல் அமர்ந்திருந்து பக்தர்களிடம் ₹10 வழங்க வேண்டும் என கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அடாவடி வசூல் காரணமாக சிறுவர், சிறுமியர் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோயில் பகுதி சுகாதாரக் கேடு நிறைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது.இதேபோல்,கோயிலுக்கு சென்றால் தேங்காய் உடைக்க அங்குள்ள சிலர் ₹10 வசூல் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும், வரும் காலங்களிலாவது இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.