×

விற்பனை கூடத்தில் திடீர் ஆய்வு நெல்மூட்டைகளை குடோனில் வைத்து காலம் தாழ்த்தும் வியாபாரிகள் மீது நடவடிக்கை

விருத்தாசலம், ஜன. 30: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் கம்மாபுரம், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, ஆலடி, வேப்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையக்கூடிய நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், கொள்ளு, பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி தொடங்கியுள்ளதால் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால் தினந்தோறும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் வெளியே கொண்டு செல்லாமல் குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் விற்பனைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஒரு வாரம், பத்து நாட்கள் என விவசாயிகள் இங்கு தங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து விருத்தாசலம் சார் ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சார் ஆட்சியர் பிரவின்குமார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், பணப் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து விவசாயிகளின் விளைபொருட்களை உடனடியாக வாங்க வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரிடம் உத்தரவிட்டார். மேலும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கிய விளை பொருட்களை  ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும், 24 மணி நேரத்திற்குமேல் விளைபொருட்களை குடோனில் வைத்து காலம் தாழ்த்தும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், உழவன் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களின் அன்றாட விலைப்பட்டியல் நிலவரம் பற்றி தெரிந்து விழிப்புணர்வு அடைய வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். என்றார். ஆய்வின்போது, விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, துணை வட்டாட்சியர் அன்புராஜ் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : traders ,grocery store ,inspection ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...